THOWHEED GUIDE

Buscar

நீதிபதிகள் அணிவது கறுப்பு அங்கியா? காவி உடையா?

* 2003 நவம்பர் : மராட்டிய மாநிலம் பர்பானி முகமதிய மசூதியில் ஆற்றல் வாய்ந்த ஒரு குண்டு வெடித்துப் பலர் படுகாயம்.

* 2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் ஜல்னா குவாதிர் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பின் போது பலருக்குக் காயம்.

* 2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் நந்தேடு என்ற இடத்தில் இரண்டு பஜ்ரங்தளத் தொண்டர்கள் ஒரு குழாய் வெடிகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறுதலாய் அந்தக் குண்டு வெடித்ததில் அவ் இருவரும் உயிரிழப்பு, விசாரணையில் அந்தக் குண்டு உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட வீடு ஓர் ஆர்.எஸ்.எஸ். தொண் டருடைய வீடு எனக் கண்டுபிடிப்பு.

* 2006 சனவரி : அதே மராட்டிய மாநிலம் தானே நகரின் கட்கரி அரங்கில் நேர்ந்த குண்டு வெடிப்பு. அதில் ஈடுபட்ட அனைவரும் ஜன்ஜக்ரான் சமிதி என்கிற இந்துத் தீவிரவாத அமைப்பினர் என்கிற உண்மை வெளிப்பாடு.

* 2006 செப்டம்பர் : மராட்டியத்தின் மலேகான் நகரில் இசுலாமியர்கள் அடர்த்தியாய் வாழும் பகுதியான பிக்குசவுக் என்ற இடத்தில் ஆற்றல் வாய்ந்த நான்கு குண்டுகள் தொடர்ந்து வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு. பலர் படுகாயம்.

* 2007 பிப்ரவரி : புதுதில்லிக்கும் லாகூருக்கும் இடையே அரியானா மாநிலம் பானிப்பட்டு அருகே ஓடும் சம்ஜவ்தா விரைவுத் தொடர் வண்டியில் குண்டு வெடித்துப் பலர் சாவு.

* 2007 மே : ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு.

* 2007 நவம்பர் : இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் இரம்சான் நோன்பின் போது குண்டு வெடிப்பு.

* 2008 செப்டம்பர் : மராட்டிய மாநிலம் அதே மலேகான் நகரில் மீண்டும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஏராளமானோர் உயிரிழப்பு. பலருக் குப் படுகாயம். பலகோடி ரூபாய் பொருள் இழப்பு.

நாட்டின் பல பகுதிகளில் நடந்த இத்தகைய தொடர் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் இசுலாமியத் தீவிரவாதிகள் தான் காரணம் என்று இந்துத்துவ வெறிக்கு ஆட்பட்ட எல்லோரும் பச்சையாய்ப் புளுகினார்கள். பாகிஸ்தானின் தூண்டுதல்தான் காரணம் என்ற அவர்களின் கூற்றை நாளேடுகளும் ஊடகங்களும் ஊதிப் பெருக்கின. ‘சிமி’ அமைப்பைச் சேர்ந்த பல அப்பாவி இசுலாமிய இளைஞர்கள் விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார்கள்; வன்கொடு மை செய்யப்பட்டார்கள்.

அஸ்கர் அலி என்ஜினியர் போன்ற இசுலாமிய அறிஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மைய மாநில அரசுகளின் இத்தகைய கண்மூடித்தனமான செயல்களுக்குத் தம் கடுங்கண்டனத்தைத் தெரிவித்தனர். “அரசும் காவல்துறையும் ‘இசுலாமியக் குழுக்கள் மட்டுமே இவற்றைச் செய்திருக்க வேண்டும்’ என்ற முடிவுக்கு வருவது முட்டாள்தனமும் மோசடித்தனமான கற்பனையும் ஆகும். இசுலாமியர்கள் மட்டுமே அடர்த்தி யாக வாழக்கூடிய இடத்தில் இரமலான் நோன்பு பிறக்கும் காலமும், தொழுகை நடைபெறும் நேரமும் பார்த்து ஏன் இவர்கள் இந்தக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த வேண்டும்?” என்கிற அவர்களின் பொருள் பொதிந்த வினாவை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவே இல்லை.

ஆனால் உண்மையைப் பல காலம் பூட்டி வைக்க முடியுமா? பொய்யும் புனைசுருட்டும் வெளிப்படாமலா போகும்? 2008 செப்டம்பர் 29 அன்று மலேகான் நகரில் இரண்டாவது முறையாய் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப்பின், அக்டோபர் 23 அன்றே பிரக்கியாசிங் தாகூர் என்கிற பெண் துறவியையும், அவருடைய இரண்டு உதவியாளர்களையும் காவல்துறை கைது செய்கிறது. அதற்குப் பிறகேனும் அரசும் காவல்துறையும் புலனாய்வுத் துறையை முழு வீச்சில் முடுக்கி விட்டு உண்மைகளை விரைவில் வெளிக்கொணர்ந்து இருக்கலாம்.

போலிப் பெண் துறவியான பிரக்கியா தாகூர் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. யிலும் (அகில பாரத வித்யார்த்தி பரிஷத்) விசுவ இந்து பரிசத்தின் பெண்கள் பிரிவான துர்கா வாகினிப் படையிலும் தீவிர உறுப்பினராக இருந்தவர். இந்தக் கைது நடவடிக்கைகள் நிகழ்ந்த போதெல்லாம் இந்தியா முழுவதிலும் உள்ள இந்துமதவெறி அமைப்புகள் இது இந்து மதத்தை அழிக்கச் செய்யும் சதி என்று கூச்சல் போட்டு மதக்கலவரங்களைத் தூண்டிவிட்டன.

ஆனால் பெருச்சாளி கட்டுச் சோற்றிலிருந்து வெளிப்பட்ட கதையாக, இந்த மதவெறிக் கூட்டத்தின் சதிகாரக் கூட்டு இப்போது வெளிப்பட்டுவிட்டது.

2007ஆம் ஆண்டு மே மாதம் ஐதராபாத்தில் நடந்த மெக்கா மசூதி குண்டு வெடிப்புத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அசிமானந்தர் என்பவர் தானாக முன்வந்து அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் எல்லா உண்மைகளையும் கக்கிவிட்டார்.

நவகுமார் சர்க்கார் என்பது இவருடைய இயற்பெயர். இயற்பியலில் முதுகலைப்பட்டம் முடித்தவர். ஆர்.எஸ்.எஸ். இயக்கக் கொள்கைப் பரப்புநராக அந்தமான் நிக்கோபர் தீவுகள் போன்ற பல இடங்களுக்கு அனுப்பப்பட்டவர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகமிக நெருக்கமானவர். பல நிகழ்ச்சிகளில் அவருடன் சேர்ந்து ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டவர்.

மெக்கா மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு மட்டு மின்றி இராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மலேகான் குண்டு வெடிப்பு, புதுதில்லி - லாகூர் சம்ஜவ்தா தொடர் வண்டிக் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அத்தனைக்கும் தானும் தான் சார்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான் காரணம் என்று மனந்திறந்து அவர் சொல்லிவிட்டார்.

இவ்வாறு இவரை மனந்திறக்க வைத்த நிகழ்ச்சி எது தெரியுமா? கீழ்க்காணும் இவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படித்தால் உண்மை புரியும். “மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி நான் ஐதராபாத்துச் சிறையில் இருந்தேன். என்னுடன் சிறையில் இருந்தோரில் கலீம் என்னும் 21 வயது இளைஞனும் ஒருவன். அவனும் அதே மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைப் பட்டிருந்தான். நான்காண்டுகளுக்குப் பிறகும் அவனுக்குப் பிணை கிடைக்கவில்லை. அவன் என்மீது மிகவும் அன்புகாட்டினான். எனக்கு உணவு தண்ணீர் எடுத்துவர உதவினான். இஃது என் மனச்சான்றை உறுத்தியது. நான் செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடவே இப்படி ஒப்புதல் வாக்குமூலம் தர முடிவு செய்தேன். இதனால் எனக்குச் சாவுத் தண்டனை கிடைக்கலாம் என்பதையும் நான் அறிவேன்”.

கல்லும் கரையும்படி, இப்படியான ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு மதவெறிக் கொலைஞன் வழங்கும் இதேநேரத்தில், 1999ஆம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில் கிரகாம் ஸ்டெயின்ஸ் என்ற ஆஸ்திரேலியப் பாதிரியாரும் அவரின் இரண்டு மகன்களும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக, தில்லி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது வெந்த புண்ணில் வேல் கொண்டு பாய்ச்சுவதுபோல் உள்ளது.

1999 சனவரி 22ஆம் தேதி நள்ளிரவு ஒரிசாவில் உள்ள மனோகர்பூர்ச் சிற்றூரில் கிருத்துவப் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்சும் அவருடைய இருமகன்கள் பிலிப் (9), திமோதி (6) ஆகிய மூவரும் நடுங்கும் குளிரில் ஒரு வல்லுந்தில் (ஜீப்) உறங்கிக் கொண்டிருந்தனர். அம்மூவரையும் அங்கே திரண்ட ஓர் இந்துப் பாசிச மதவெறிக் கும்பல் உயிரோடு கொளுத்திச் சாம்பலாக்கியது. இப்படுகொலையைத் தாராசிங் என்ற கொடியவன் தன் கூட்டாளிகளுடன் முன்நின்று நடத்தினான்.

ஈவிரக்கமற்ற இந்த ஈனச் செயலை இந்துப் பயங்கரவாத அமைப்பான பஜ்ரங்தளம்தான் நடத்தி இருக்க வேண்டுமென நாடு முழுமையிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

அப்போதைய நடுவண் உள்துறை அமைச்சரான எல்.கே. அத்வானி “பஜ்ரங்தள் அமைப்பினரைப் பற்றி நான் நீண்டகாலமாக நன்றாக அறிந்து வைத்திருப்பவன். அவர்கள் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க வேமாட்டார்கள்” என உறுதிபடக் கூறினார். பா.ஜ.க. கூட்டணி அரசின் நடுவண் அமைச்சர்களான முரளி மனோகர் ஜோஷி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், நவீன்பட் நாயக் ஆகிய மூவரும் கொலை நடந்த இடத்தை 27.1.1999 அன்று பார்வையிட்டபின் இதில் இந்து அமைப்புகளின் பங்கு எதுவும் இல்லை என்று கை விரித்தனர். இப்படுகொலை தொடர்பாக உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி டி.பி. வாத்வா குழுவும் கண்துடைப்பான ஓர் அறிக்கையை அரசுக்கு அளித்துவிட்டுத் தன் கடமையை முடித்துக் கொண்டது.

இந்தியா முழுவதும் இருந்த மதச்சார்பற்ற அமைப்புகளும், மனித உரிமைப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத் தாராசிங் உள்ளிட்ட கொடியவர்கள் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். வழக்கை நடத்திய குர்தா குற்றவியல் நீதிமன்றம் தாராசிங்கிற்குத் தூக்குத் தண்டனையும், மற்ற பன்னிருவர்க்கு வாழ்நாள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கு ஒரிசா உயர்நீதிமன்றம் சென்றது. அங்கு தாராசிங்கின் தூக்கு, வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மேலும் வாழ்நாள் தண்டனை பெற்ற 12 பேரில் மகேந்திரா ஹெம் ப்ராம் என்பவனின் தண்டனை மட்டும் உறுதி செய்யப்பட்டு மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

நடுவண் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) இவ் வழக்கை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது. இதன்மீது கடந்த 21.1.2011 அன்று தீர்ப்புரைத்த பி. சதாசிவம், டாக்டர் பி.எஸ். சௌகான் ஆகிய இருவர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, ஒரிசா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்தது.

இவ்விரு நீதிபதிகளும் “ஸ்டெயின்சும் அவருடைய இரு பிஞ்சு மகன்களும் உயிருடன் எரிக்கப்பட்டிருந்தாலும், மதப் பரப்புரை என்கிற பெயரில் ஏழைப் பழங்குடி மக்களைக் கிருத்துவத்திற்கு மதமாற்றம் செய்து கொண்டிருந்த ஸ்டெயின்சுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான் எதிரிகளின் நோக்கமாக இருந்தது” எனப் பச்சையானதோர் இந்துப் பாசிச வெறித் தீர்ப்பை வழங்கினர்.

“அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே சாவுத் தண்டனை விதிக்கப்பட வேண்டும். அஃதும் அந்நிகழ்வின் போதிருந்த உண்மை நிலை, சூழல் ஆகியன பொறுத்தே அது அமைய வேண்டும்” என்று கூறித் தாராசிங் தண்டனைக் குறைப்பை அவர்கள் ஞாயப்படுத்தினர்.

‘வலுக்கட்டாயமாகவோ, ஆசை காட்டியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்ததென்னும் கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களின் நம்பிக்கையில் தலையிடுவதை ஞாயப்படுத்தவே முடியாது’ என்ற நீதிபதிகளின் கருத்தானது, ‘கிருத்துவ மிஷனரிகள் மருத்துவமனைகள் கட்டியும், கல்விச்சாலைகள் அமைத்தும் கபடமான முறையில் பழங்குடி மக்களை மதமாற்றம் செய்கிறார்கள்’ என்கிற காவிக் கும்பலின் அப்பட்டமான மொழி பெயர்ப்பாகவே உள்ளது.

ஒரிசாவில் ஸ்டென்ஸ் பாதிரியாரும் அவருடைய இரு மகன்களும் கொல்லப்பட்ட அதே காலக்கட்டத்தில்தான் குசராத்திலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கிருத்துவத் தேவாலயங்கள் மீதும் பாதிரிகள் மற்றும் கன்னிமார்கள் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடந்து வந்தன. அப்போதைய பிரதமர் வாஜ்பேயி ‘மதமாற்றம் தொடர்பாக நாடு முழுவதும் தேசிய விவாதம் நடத்த வேண்டும்’ என்று கூறி இந்துமத வெறி அமைப்புகளை உசுப்பேற்றினார். “மதமாற்றம் மூலம் ‘பாரத தேசத்தில்’ இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. முசுலீம்களின், கிருத்து வர்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாகப் பெருத்து விட்டது” என்கிற கோயாபல்சு புளுகைக் காவிக் குண்டர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் உண்மைநிலை என்ன?

ஸ்டென்ஸ் கொலை வழக்கில் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்ட நீதிபதி வாத்வா குழுவும் ‘படுகொலை நடந்த கியோஞ்சர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஒன்றும் கிருத்துவர்களின் எண்ணிக்கை உயர்ந்து விடவில்லை’ என்பதை மறைக்காமல் ஒப்புக் கொண்டது. அண்மையில் வெளியிடப்பட்ட சச்சார் குழுவின் அறிக்கையும் இந்நாட்டில் வாழும் இசுலாமிய மக்களின் அவலம் மிக்க வாழ்நிலையை ஓரளவுக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. ஆனால் இந்துத்துவ சிந்தனைக்கு ஆட்பட்டுவிட்ட இந்திய நீதித்துறை எந்த ஒன்றையும் காதில் போட்டுக் கொள்வதில்லை.

குசராத்தில் கோத்ரா தொடர்வண்டிப் பெட்டிகள் எரிக்கப்பட்டதற்கு எதிர்வினையாகப் பல்லாயிரக்கணக்கான அப்பாவி முசுலீம்களைப் படுகொலை செய்த நரேந்திரமோடியும், இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் உதிர்த்துள்ள இதே முத்துக்களைத்தான் தனது பாணியில் அப்போது உதிர்த்தார்.

அரிதினும் அரிதான வழக்குகளில்தான் சாவுத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று இந்த நீதிபதிகள் கதையளக்கிறார்கள். தொழுநோய்ப் பீடித்த ஏழைப் பழங்குடி மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய எங்கிருந்தோ வந்த ஒரு பாதிரியாரும், அவருடைய இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் உயிரோடு எரித்துச் சாம்பலாக்கப்பட்ட கொடுமை இவர்களின் இந்துத்துவக் கண்களுக்கு அரிதினும் அரிதான வழக்காகத் தெரியவில்லை. ஆனால் உயிரற்ற ஒரு நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு மட்டும் உடனே தூக்குத் தண்டனையை இந்நீதிபதிகள் தூக்கிக் கொடுத்துவிடுவார்கள்.

அறத்தைக் கொன்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு நாடு முழுவதும் அதிர்ச்சிப் பேரலைகள் எழுந்தன. நீதிக்கே நீதிமன்றம் சவக் குழி தோண்டலாமா என்று பல பேர் நெஞ்சங் கொதித்தார்கள்.

தன்நெஞ்சே தன்னைச் சுட்டதோ என்னவோ? தீர்ப்பு வழங்கிய நாளுக்கு (21.1.2011) நான்கு நாள் கழித்து அந்த இரு நீதிபதிகளும், தாம் வழங்கியிருந்த தீர்ப்பின் வரிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர்.

‘வலுக்கட்டாயமாகவோ, ஆசை காட்டியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்ததென்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களின் நம்பிக்கையில் தலையிடுவதை ஞாயப்படுத்தவே முடியாது’ என்ற முன்னர்ச் சொன்ன கருத்தை ‘மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வழியில் தலையிடுவதையும் ஞாயப்படுத்த முடியாது’ என்று மட்டும் மாற்றி இருக்கிறார்கள்.

இதுவுங்கூட ஒப்புக்குச் சப்பாணியான ஒட்டு வேலைதான். இப்படி மாற்றியதால் ‘தாராசிங்கின் குற்றச் செயலுக்குச் சாவுத் தண்டனை ஏன் வழங்கவில்லை?’ என்ற வினா எழுந்துவிடுமோ என்ற எண்ணத்தில், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் முடிந்துவிட்ட தால் ஒரிசா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வாழ்நாள் சிறை தீர்ப்பை மாற்றத் தேவையில்லை” என்று கூறி இரண்டு நீதிபதிகளும் மல்லுக்கட்டி இருக்கிறார்கள்.

முன்னாள் பிரதமர் இராசிவ்காந்தி கொலை வழக்கில் நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவில் கீழமை நீதிமன்றத்தால் 26 பேருக்குத் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இறுதியில் அவர்களில் 4 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய தோழர்கள் கடந்த 20 ஆண்டுகளாகச் சிறைக் கொட்டடிகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களில் நளினிக்கு மட்டும் தூக்குத்தண்டனை, பின்னர் வாழ்நாள் சிறையாக மாற்றப்பட்டது.

12 ஆண்டுகள் முடிந்துவிட்டதால் சாவுத் தண்டனை தேவையில்லை என்று தாராசிங் வழக்கில் சட்டம் பேசும் நீதிபதிகள் தமிழ்நாட்டுக் கைதிகளுக்கு அதனைப் பொருத்தக்கூடாதா?

ஆக, கொல்லப்பட்டவன் ஒரு கிருத்துவனாகவோ, இசுலாமியனாகவோ இருந்தால் அவன் உயிர் கிள்ளுக்கீரை! அவனே, இந்துவாகவோ, பார்ப்பானாகவோ இருந்துவிட்டால் அந்த உயிர் மட்டும் அச்சு வெல்லமா?

இந்திராகாந்தியின் கொலைக்கு எதிர்வினையாகத் தலைநகர் தில்லியில் பல்லாயிரம் சீக்கியர் படுகொலை செய்யப்பட்டனர். பாபர் மசூதி இடிப்பையொட்டி எழுந்த கலவரங்களின் போதும், ‘கோத்ரா‘ இரயில் எரிப்பைத் தொடர்ந்தும் இந்நாட்டின் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக் கணக்கில் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டனர். என்ன செய்து கிழித்துவிட்டது நீதித்துறை?

1992 திசம்பர் 6இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ‘அதற்குமுன் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் கோயில் இருந்தது; கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர் இந்த இடத்தில் மசூதி கட்டினார்’ என்கிற ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி நாட்டையே சுடுகாடாக்கினர் காவிக் கள்வர்கள். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லுமாறு உச்சநீதிமன்றத்தை நடுவண் அரசு அணுகியபோது ‘இஃது எமது ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டது’ என்று தன் பொறுப்பைத் தட்டிக்கழித்தது உச்சநீதிமன்றம்.

ஆனால் அந்த வழக்கில் கடந்த 2010 செப்டம்பர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் மூவரும் 60 ஆண்டைய வழக்கில், “மசூதி கட்டப்பட்டிருந்த மொத்த இடமும் இந்துக்களுக்கு உரியதுதான். இங்குதான் இராமன் பிறந்தான். அந்த நம்பிக்கையோடுதான் நீண்ட காலமாக இந்நாட்டு இந்துக்கள் அங்கே வழிபாடு நடத்தி வருகிறார்கள். கோயிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது” என்று சொல்லித் தற்போது இராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப் பகுதியை இந்துக்களுக்கே தாரைவார்த்துவிட்டார்கள். இந்திய அரசின் மதச்சார்பின்மைத் தத்துவத்தையும், நீதித்துறையின் நேர்மையையும் தமது தீர்ப்பின் மூலம் நார்நாராகக் கிழித்துப் போட்டார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்சு என்பவர் 2010 நவம்பர் 26 அன்று வழங்கிய ஒரு தீர்ப்பின் போது, “அலகாபாத் உயர்நீதிமன்றமே அழுகி நாறத் தொடங்கியுள்ளது. இங்குப் பணியாற்றும் நீதிபதிகள் சிலர் மீதே புகார்கள் வருகின்றன என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். அந்நீதிபதிகளின் உறவினர்கள் தவறான வழிகளில் பொருளீட்டித் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பெருக்கிக் கொண்டு, சொகுசு வாழ்க்கையில் திளைக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். அலகாபாத் மற்றும் இலக்னோ நீதிமன்ற அழுக்குக் கறைகளை எந்த வழலைப் (சோப்பு) போட்டேனும் கழுவித் துடைத்தாக வேண்டும். இதற்கு அங்குள்ள தலைமை நீதிபதி கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டாக வேண்டும்” என்று பரிந்துரைத்தார் (தி இந்து 9.12.2010).

நாறுவது இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்கள் மட்டுந்தானா? உச்சநீதிமன்ற நீதிபதிகள் மட்டுமென்ன ஒழுக்கமானவர்களா? அவர்களைக் நோக்கி வினவவே ஆளில்லையா?

பசித்தவன் வயிறு விசைத்தெழுந்தால்

பொசுங்கிப் போகும் இரும்பும் - இப்

புவியில் மிஞ்சாது துரும்பும்!

தீண்டத்தகாதவன்!


Periyar E.V. Ramasamyநான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

அடிமைகளாக வாழ விரும்புவோர் இதைப் படிக்க வேண்டியதில்லை

Ambedkar

மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. இது, பொழுது போக்கிற்கான செய்தியும் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமானதாக்குவது என்பது பற்றி இது பேசுகிறது. கப்பலைச் செலுத்துவதற்கு ஒரு மாலுமி எப்படி எல்லாவற்றையும் தயார் செய்வாரோ, அதேபோல், நாமும் மதமாற்றத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களில் எத்தனை பேர் இந்து மதத்திலிருந்து வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று தெரிந்தால்தான், மதமாற்றத்திற்கான தயாரிப்புகளை நான் மேற்கொள்ள முடியும். மதமாற்றத்தைப் பற்றி புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், பாமர மக்கள் மதமாற்றம் குறித்து அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.

மதமாற்றத்தை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். இது, சமூகம் மற்றும் மதம் சம்பந்தப்பட்டது; பொருளியல் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது. இதை எப்படிப் புரிந்து கொண்டாலும், தீண்டாமையின் தன்மையையும் அது எப்படித் தோன்றியது என்பதையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதைப் புரிந்து கொள்ளா விட்டால், நான் அறிவித்திருக்கும் மதமாற்றத்தின் உண்மையான பொருளை நீங்கள் உணர முடியாமல் போய்விடும்.

தீண்டாமையைப் பற்றியும் அது நடைமுறை வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், உங்கள் மீது இழைக்கப்படும் வன்கொடுமைகளை மீண்டும் நினைத்துப் பாருங்கள். ஆனால், உங்களில் ஒரு சிலரே, இதுபோன்ற வன்கொடுமைகள் எல்லாம் ஏன் நடக்கிறது என்று சிந்தித்திருப்பீர்கள். சாதி இந்துக்களின் கொடுங்கோன்மைக்கு மூல காரணமாக இருப்பது எது? என்னைப் பொறுத்தவரை, இதை நீங்கள் புரிந்து கொள்வது மிக மிக அவசியம் என்று கருதுகிறேன்.

இது, இரு எதிரிகளுக்கிடையே நடைபெறும் சண்டை அல்ல. தீண்டாமைப் பிரச்சினை என்பது வகுப்புப் போராட்டத்துடன் தொடர்புடையது. இது, சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமாகும். இது, ஒரு மனிதனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி அல்ல. இது, ஒரு வகுப்பு இன்னொரு வகுப்புக்கு எதிராக இழைக்கும் அநீதியாகும். இந்த வகுப்புப் போராட்டம், சமூக அந்தஸ்துடன் தொடர்புடையது. ஒரு வகுப்பு மற்றொரு வகுப்புடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று இப்போராட்டம் உணர்த்துகிறது. ஒரு வகுப்பு மற்ற வகுப்புடன் சமமான நிலையைக் கோரும் போதுதான் இப்போராட்டம் தொடங்குகிறது.

அவர்களுடைய கோபத்திற்கான காரணத்தைப் புரிந்து கொள்வது மிக எளிது. அவர்களுக்கு சமமாக நீங்கள் நடந்து கொள்வது, அவர்களைப் புண்படுத்துகிறது. தீண்டாமை என்பது குறுகிய அல்லது தற்காலிகமானது அல்ல. இது, நிரந்தரமான ஒன்று. இது, தலைமுறை தலைமுறையாக இருக்கக்கூடியது; ஒரு மனிதன் இறந்த பிறகும் தீண்டாமை தொடருகிறது. ஏனெனில், சமூகத்தின் அடிநிலையில் உங்களை வைத்திருக்கும் மதமே சாதி இந்துக்களின் நம்பிக்கையின்படி என்றுமே மாற்ற முடியாத ஒன்றாகும்.

காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் கீழ் நிலையில் இருக்கிறீர்கள். இறுதிவரை நீங்கள் அங்கேதான் இருக்க முடியும். இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டம், என்றென்றைக்கும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதன் பொருள். இந்தப் போராட்டத்தை நீங்கள் எப்படி சந்திக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.

இது குறித்து நீங்கள் சிந்திக்கவில்லை என்றால் வேறு வழியே இல்லை. சாதி இந்துக்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அடிமைகளாக வாழவிரும்புகிறவர்கள் இப்பிரச்சினை குறித்து எப்போதுமே கவலைப்படுவதில்லை. ஆனால், சுயமரியாதைமிக்க சமத்துவமிக்க வாழ்க்கையை வாழ விரும்புகின்றவர்கள் இது குறித்து சிந்தித்தாக வேண்டும்.

இப்போராட்டத்தை சமாளிப்பது எப்படி? என்னைப் பொருத்தவரை, இக்கேள்விக்கு விடை காண்பது கடினமல்ல. எந்தவொரு போராட்டத்திலும், யாருக்கு வலிமை அதிகம் இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றுவிடுவர் என்பதை இங்கு கூடியிருக்கும் அனைவரும் ஒத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். வலிமையற்றவர், வெற்றிபெறும் வாய்ப்பை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. இது அனுபவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இனி இப்போராட்டத்தில் வெற்றிபெற, உங்களுக்குப் போதிய பலம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது.


1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில்

மதம் மாறக் கூடாது என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான் .

Ambedkar

மதத்தை மாற்றிக் கொள்வது என்பது, ஒருவரின் பெயரை மாற்றிக் கொள்வது போலத்தான். மதத்தை மாற்றிக் கொண்ட பிறகு பெயரையும் மாற்றிக் கொள்வது, உங்களுக்குக் கூடுதல் பயனளிக்கும். ஒருவர் தன்னை முஸ்லிம், கிறித்துவர், பவுத்தர், சீக்கியர் என்று அழைத்துக் கொள்வது, வெறும் மதமாற்றம் மட்டும் அல்ல; பெயர் மாற்றமும்கூட. மதமாற்றத்திற்கான இந்த இயக்கத்தைத் தொடங்கும்போதுகூட, பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுடைய எதிர்ப்புகளில் உண்மை இருக்கிறதா என்று இனி பார்ப்போம்.

நம்முடைய முன்னோர்கள் இந்த மதத்தில் இருந்தார்கள் என்பதற்காகவே நாமும் அந்த மதத்தில் நீடித்திருக்க வேண்டும் என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான். எந்த சாதாரண மனிதனும் மதம் மாறக் கூடாது என்ற கருத்தை ஒப்புக் கொள்ள மாட்டான். இதுபோன்ற வாதத்தை முன்னிறுத்தும் எவரும் வரலாற்றைப் படிக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

பழங்கால ஆரிய மதம், வேத மதம் என்று அழைக்கப்பட்டது. இது, ன்று தனித்த கூறுகளைக் கொண்டிருந்தது. மாட்டிறைச்சி தின்பது, மது அருந்துவது, கும்மாளமடிப்பது. அன்றைய மதத்தின் முக்கிய பகுதியாக இம்மூன்றும் இருந்தது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இதைப் பின்பற்றினர். இன்றைக்கும்கூட சில பேர் இத்தகைய வாழ்க்கை நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.

நம்முடைய மூதாதையர்களின் மதமே பின்பற்றப்பட வேண்டும் என்றால், இந்திய மக்கள் இந்து மதத்தைக் கைவிட்டுவிட்டு பவுத்தத்தை ஏன் தழுவினர்? வேத மதத்திலிருந்து ஏன் தங்களை விடுவித்துக் கொண்டனர். எனவே, இந்து மதம் என்பது நமது மூதாதையர்களின் மதம் அல்ல; இது, நம்மீது திணிக்கப்பட்ட அடிமைத்தனமே.

இந்து சமூகத்தைச் சீர்திருத்துவது, நம்முடைய நோக்கமோ, செயல் திட்டமோ அல்லவே அல்ல. நம்முடைய நோக்கம் சுதந்திரம் பெறுவது. வேறு எந்த வேலையும் நமக்கில்லை. நாம் மதமாற்றத்தின் மூலம் சுதந்திரத்தை அடைய முடியும் எனில், இந்து மதத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை ஏன் சுமக்க வேண்டும்? நம்முடைய பலத்தையும் உடைமைகளையும் நாம் ஏன் இதற்காகத் தியாகம் செய்ய வேண்டும்? நம்முடைய இயக்கத்தின் நோக்கம், இந்துமத சீர்திருத்தம் என்று ஒருவர்கூட தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நம்முடைய இயக்கத்தின் நோக்கம், தீண்டத்தகாத மக்களுக்கு சமூக விடுதலையைப் பெற்றுத் தருவதே ஆகும். மதம் மாறாமல் நாம் இந்த விடுதலையைப் பெறவே முடியாது.

தீண்டத்தகாத மக்களுக்கு சமத்துவமும் தேவை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இந்துவாக இருப்பதால் மட்டுமே ஒருவன் சமத்துவத்தை அடைய முடியும் என்றும், இல்லை எனில் முடியாது என்றும் எவருமே சொல்ல முடியாது. சமத்துவத்தை அடைய இரு வழிகள் உள்ளன. 1. இந்து மதத்தில் இருப்பது; 2. இந்து மதத்தை விட்டு விலகி மதம் மாறுவது.

இந்து மதத்தில் இருந்து கொண்டு எப்படி சமத்துவத்தை அடைய முடியும்? ஒருவன் தீண்டத்தகுந்தவனாகவோ, தீண்டத்தகாதவனாகவோ இருக்கக் கூடிய உணர்வைப் போக்குவது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்து விடாது. கலப்புத் திருமணத்தாலும், கலந்துண்ணுவதாலுமே சமத்துவத்தை அடைய முடியும்.

இதற்கு ‘சதுர்வர்ணம்' (நான்கு வர்ணம்) அழிக்கப்பட வேண்டும்; பார்ப்பன மதம் வேரறுக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகுமா? இல்லை எனில், இந்து மதத்தில் இருந்து கொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது விவேகமாகுமா? இதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறுமா? ஒருபோதும் வெற்றி பெறாது.

மதமாற்றப் பாதை இதைவிட மிகமிக எளிதானது. இந்து சமூகம், öவஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் சமமாக நடத்துகிறது. மிகத் தெளிவாக, மதமாற்றத்தின் மூலமே சமூக சமத்துவத்தைப் பெற முடியும். இது உண்மை எனில், இந்த எளிமையான வழியை நீங்கள் ஏன் பின்பற்றக் கூடாது?

1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் ஆற்றிய பேருரை